புதிய குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) கோரி இணையவழியில் விண்ணப்பித்து 4 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கும் பொதுமக்களின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மையத்தின் பொதுச்செயலாளர் சு. சிவசுப்பிரமணியம், தமிழக முதலமைச்சர் மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதிதாக திருமணமாகி தனிக்குடும்பமாக வசிப்பவர்கள், கூட்டுக்குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக வசிப்பவர்கள், குடியிருப்பு மாற்றம் செய்தவர்கள் உள்ளிட்ட பலர் புதிய குடும்ப அட்டை கேட்டு இணையவழியில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், பல விண்ணப்பங்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்ப அட்டை இல்லாததால் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதிலும், குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதிலும் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஏற்கனவே ரேஷன்கார்டுகள் விண்ணப்பித்தால் சம்பந்தபட்ட வட்ட வழங்கல் அலுவலர் கவனத்திற்கு வரும் உடனடியாக தள தணிக்கை செய்து அறிக்கை தருவார்கள். தற்போது சென்னையில் இருந்து பரிந்துரை செய்தால் மட்டுமே வட்ட வழங்கல் அலுவலர்கள் தணிக்கை செய்யமுடியும் என்கிற நிலையால் வட்ட வழங்கல் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர்கள் விண்ணப்பங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளதால் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை தாமதம் ஆகிறது.
எனவே, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை சிறப்பு முறையில் பரிசீலித்து, தகுதியானவர்களின் வீடுகளில் விரைந்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட மற்றும் வட்ட அளவில் தேவையான அதிகாரம் வழங்கி, தேவையற்ற நிர்வாக காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.
மேலும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்காக சிறப்பு கள ஆய்வு முகாம்கள் நடத்தி, தகுதியான குடும்பங்களுக்கு விரைவாக குடும்ப அட்டை வழங்க வேண்டும். விண்ணப்பத்தின் நிலை, ஆய்வு நிலை மற்றும் நிராகரிப்புக்கான காரணம் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் எளிதில் அறியும் வகையில் வெளிப்படையான தகவல் வசதி ஏற்படுத்த வேண்டும்.
நீலகிரி போன்ற மலை மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு குடும்ப அட்டை வழங்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சு. சிவசுப்பிரமணியம் தனது மனுவில் கூறியுள்ளார்.