தேசிய மூத்தோர் தடகள போட்டி பெங்களூருவில் நடை பெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பில், நீலகிரி மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் காரி, செயலாளர் திவாகரன் மற்றும் நீலகிரி வீரர்கள் , வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் 2 கிலோ மீட்டர் ஓட்ட போட்டியில் கோத்தகிரி அருகே குருக்குத்தி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மணி வெள்ளி பதக்கம் பெற்றார். கோத்தகிரி தனியார் பள்ளி ஆசிரியை ஹேமலதா 5 கிலோ மீட்டர் நடைப்போட்டியில் 3-ம் இடமும், 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் 2-ம் இடமும் பிடித்து வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றார். குன்னூரை சேர்ந்த சங்கீதா 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். தேசிய அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை மூத்தோர் தடகள சங்கத்தினர் பாராட்டினார்கள்.