
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்கா கோத்தகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்தப் பூங்காவில் அழகிய மலர்செடிகள், புல்தரைகள், சிறுவர் விளையாட்டு பூங்கா, கோத்தர் பழங்குடியின மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில், வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று, சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த பூங்காவில் வருடந்தோறும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக மே மாதத்தில் 3, 4 ம் தேதிகளில் தோட்டக்கலை துறை சார்பில் இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த காய்கறி கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளி மாநிலங்களில் இருந்து இந்த பூங்காவிற்கு வருவது வழக்கம். இது மட்டுமின்றி இங்குள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்கள் மற்றும் குழந்தைகளின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக விளங்கி வருகிறது.
கோடை விழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் பூங்காவில் 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும் புல் தரைகளில் அதிகப்படியாக வளர்ந்துள்ள புற்களை வெட்டி சமப்படுத்தும் பணியிலும், பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் தயார் செய்யப்பட்ட இயற்கை உரத்தைப் பயன்படுத்தி மலர் செடிகளுக்கு உரமிடும் பணியிலும் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். தற்போது பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள நாற்றுக்களில் மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இங்குள்ள செயற்கை நீரூற்றை பராமரிக்கும் பணி, மலர் செடிகள் வாடாமல் இருக்க தண்ணீர் பாய்ச்சும் பணி, மலர் நாற்றுக்களுக்கு இடையே வளர்ந்துள்ள களைச் செடிகளை அகற்றும் பணி, புல் தரைகளில் அதிகப்படியாக வளர்ந்துள்ள புற்களை நவீன எந்திரங்கள் கொண்டு வெட்டி சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கையில், வரும் கோடை சீசனுக்கு முன்னதாகவே பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்கி, காய்கறிகண்காட்சிக்கு தயாராகி விடும் என்று தெரிவித்தனர்.