
கோத்தகிரி கண்ணேரிமுக்கு அருகே மொக்கைகேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. இவர்களுக்கு அப்பகுதியில் தாழ்வான இடத்தில் உள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு கொண்டு வந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் உரியமுறையில் பராமரிக்கப்படாததால் கிணற்றை சுற்றிலும் புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்து கிடக்கிறது. மேலும் அருகே உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிணற்றில் உள்ள நீருடன் கலந்து தண்ணீர் மாசுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிணற்று தண்ணீர் குடிக்க உகந்தது இல்லை என்பதை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிராம மக்கள் கண்டறிந்தனர். இந்தநிலையில் கிணற்றை தூர்வாரி உரியமுறையில் பராமரித்து குடிநீர் கிடைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.