
நீலகிரி மாவட்டம் மலைப் பகுதியாக உள்ளதாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும், மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி, மண்ணை வெட்டி எடுக்கவும், பாறைகளை உடைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மீறி பயன்படுத்தும் பொக்லைன் உரிமையாளர் மற்றும் நில உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் விவசாய பணிகளுக்கு மினி பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் பயன்படுத்த வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை அமுலில் உள்ளது.
அனுமதியை மீறி கட்டுமானப் பணிகள்
இந்த தடை உத்தரவை மீறி, எவ்வித அனுமதியும் பெறாமல் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சொகுசு விடுதிகள், காட்டேஜ்கள் கட்டுவதற்காக பொக்லைன் உள்ளிட்ட கனரக எந்திரங்களை பயன்படுத்தி மண்ணை வெட்டி எடுப்பது, தேயிலைத் தோட்டங்களில் சாலைகள் அமைப்பது, பாறைகளை உடைப்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் கடந்த சில மாதங்களாக மலைகளை குடைந்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த மார்ச் 6 ம் தேதி வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி பாறைகள் உடைத்து வருவதை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் தொடர்ந்து அங்கு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து வருவாய்த்துறை சார்பில் நேற்று முன்தினம் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
குடியிருப்புகள் மீது பாறைகள் விழும் அபாயம்
இது குறித்து அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கையில்,
செங்குத்தான பகுதியில் மாதக்கணக்கில் இரவு, பகலாக பொக்லைன் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை அத்துமீறி பயன்படுத்தி மண்ணை வெட்டி எடுப்பது, ராட்சத பாறைகளை உடைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அங்கு அகற்றி வைக்கப்பட்டுள்ள ராட்சத பாறைகள் மழை பெய்தால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் மீது உருண்டு விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் மீது தாக்குதல்
நீலகிரி மாவட்டம் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக இருப்பதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக எந்திரங்களை பயன்படுத்தி கட்டுமான பணிகள் செய்ய வேண்டுமெனில் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும் என்கிற உத்தரவு இருப்பினும் பல பகுதிகளில், விதிமுறைகளை மீறி, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதைத் தடுக்க செல்லும் வருவாய்த்துறை அதிகாரிகளை நில உரிமையாளர்கள் மிரட்டுவதும், கனரக எந்திர ஓட்டுனர்கள் வருவாய் ஆய்வாளர்களை தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே பணி பாதுகாப்பு இல்லாததால் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்
இது மட்டுமின்றி அனுமதியின்றி இது போன்ற பணிகள் நடைபெறும்போது அந்த பணிகளை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது வருவாய்துறையா? கனிம வளத்துறை அதிகாரிகளா? காவல்துறையா என்கிற சந்தேகம் உள்ளதாலும், அதற்கான முறையான சட்ட திட்டங்கள் இல்லாததாலும் பணிகளை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கொபிட்டோ எனப்படும் மினி பொக்லைன் எந்திரங்களை விவசாய பணிக்கு பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே குன்னூர் பகுதியில் கட்டுமான பணியின் போது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்தி உரிய சட்ட திட்டங்களை ஏற்படுத்தி, நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.