தேனாடு அரசு பள்ளியில்செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

கோத்தகிரி அருகே தேனாடு கிராமத்தில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஆண்டு விழா மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி சித்திரை கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி பள்ளியில் சித்திரை கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தலைமை ஆசிரியர் ரவிகுமார் தொடங்கி வைத்தார். இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற பேச்சுப்போட்டி, நாடகம், நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக தமிழ் மொழியின் பெருமை, மொழிப்போர் தியாகம், சமூக நீதி, நாட்டின் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத்துடன் கல்வி கற்பிப்பதற்காக மத்திய அரசின் தேசிய விருது பெற்ற பள்ளி ஆசிரியர் தர்மராஜ் செய்திருந்தார்.

Categories:Uncategorized