உலக மகளிர் தினத்தையொட்டி கோத்தகிரியில் சிறப்பு மருத்துவ முகாம்

கோத்தகிரி ஈழுவா, தீயா நலச் சங்கம் மற்றும் ஈழுவா, தீயா நலச் சங்க மகளிர் பிரிவு சார்பில் கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் கே. ஏ. பி சீனிவாசன், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் , பேரூராட்சி துணைத் தலைவர் உமாநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் பிரிவு நிர்வாகி பொன்னம்மா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வனிதா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசுகையில்,இந்தியாவில் பெண்களுக்கு தான் உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தினர் நலனில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வதோடு, தங்கள் உடல்நலம் குறித்து கவலைப்படுவதில்லை. எனவே தங்களுக்கு ஏற்படும் உடல் நலக் குறைவு குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்து உரிய சிகிச்சைப் பெற்றுக் கொள்ள முன் வர வேண்டும். மகளிர் தினத்தன்று பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடையணிவது, கோலப் போட்டிகள் நடத்துவது, நடனமாடி மகிழ்வது, ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தான் இந்த தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இன்று மகளிர் தினத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில் ஊட்டி மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் சிவகுமார், போது மருத்துவர் அனுஶ்ரீ, கண் சிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் பங்கேற்று நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். முடிவில் அனுஜெய் நன்றி கூறினார்.

Categories:Uncategorized